ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் ஆட துவங்கிவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்க துவங்கியிருக்கிறார்.
அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்வதற்கு முன்பே செங்கோட்டையன் கலந்துகொண்டு போய்விட்டார்.
இப்போது தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதையும் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இன்று வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
சட்டசபைக்கு வந்த செங்கோட்டையன் அதிமுக எம்.ல்.ஏக்கள் அறைக்கு செல்லாமால் சபாநாயகர் அறைக்கு சென்று காத்திருந்தார். அதன்பின் கையெழுத்து போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். இதுபற்றி பழனிச்சாமியிடம் செய்தியாளர் கேட்டதற்கு ‘இதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?’ என கோபப்பட்டார். கொங்கு பெல்ட் என சொல்லப்படும் கொங்கு மண்டலம் செங்கோட்டையன் கையில் இருக்கிறது. அவர் பழனிச்சாமியை எதிர்த்தால் அங்கு அதிமுக வாக்கு வங்கி பாதிக்கும் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.