தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது பணி நிரந்தரத்திற்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ₹12,500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யும் என உறுதி அளித்திருந்தாலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் சில பகுதிநேர ஆசிரியர்கள் புதிய முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். பொதுவாக, அந்தக் கோவிலில் பக்தர்கள், தங்களது கோரிக்கைகளை “வேண்டுதல் சீட்டு” என எழுதிக் கொண்டு அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டால், இரண்டு வாரங்களில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதனை அறிந்த பகுதிநேர ஆசிரியர்கள் சிலர், “நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதற்கு தமிழக முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நல்ல புத்தி அளிக்க வேண்டும்” என வேண்டுதல் சீட்டில் எழுதி, அம்மன் சந்நிதியில் வைத்து பிரார்த்தனை செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: “நாங்கள் நீண்ட ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பாடம் நடத்தி வருகிறோம். ஆனால், தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எங்கள் நிலையை புரிந்து, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அரசியல் கட்சிகள் மீது மட்டுமே நம்பிக்கை வைக்காமல், இறை சக்தியிடமும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்” என்றனர்.
பகுதிநேர ஆசிரியர்களின் இந்த வழிபாட்டு நடவடிக்கை சமூக வட்டாரங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. அவர்கள் கோரிக்கை அரசு கவனத்திற்கு எடுத்து, விரைவில் தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.