மக்கள் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி: சிவசேனா பாஜகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் அதிரடி
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க இழுபறி நீடித்து வரும் நிலையில் மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் சிவசேனா மற்றும் பாரதீய ஜனதாவுக்கு இந்து அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளன.
இது குறித்து புனேயை சேர்ந்த சமஸ்தா இந்து அகாடி அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போதே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டு 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் விரைவில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்துக்காக இரு கட்சிகளும் இப்படி சண்டையிட்டுக் கொள்வது மக்கள் அவர்கள் கூட்டணிக்காக அளித்த தீர்ப்பை அவமதிப்பதாகும்.
சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் கொள்கை ரீதியாக வேறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை எதிர்ப்பதற்காக இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளன.
மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா ஆட்சிக்கு வந்தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். நாங்களும் விவசாயிகள் மீது அக்கறை வைத்துள்ளோம்.
இந்த கட்சிகளில் ஏதேனும் ஒன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை உருவாக்கினால், நாங்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். மேலும் அவர்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
சமஸ்தா இந்து அகாடி தவிர இதற்காக மேலும் 6 இந்து அமைப்புகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்து அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடேவும் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார் என்றும் அவர் அப்போது கூறினார்.