இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!!

0
150

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது. இதன்காரணமாக கடந்த 2-ந் தேதி வரை 2,563 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் புதன்கிழமையன்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 590 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 10 ஆயிரத்து 153 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன் காரணமாக, தேர்தல் அலுவலகங்கள் களை கட்டின. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், அனைத்து பகுதிகளிலும் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.