தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!

0
147
#image_title

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வானது இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 46%-மாக இருந்த அகவிலைப்படி தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 50%மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

இந்த அறிவிப்பின் படி, அரசு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 16 லட்சம் பேர் பயனடைவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த செய்தி குறிப்பில், கடந்த அரசு ஆட்சியில் இருந்த பொழுது ஏற்படுத்திய கடன் சுமை, நிதி நெருக்கடி, கோவிட் தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவைகளுக்கு மத்தியிலும் தற்போதைய அரசு, அரசாங்க பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையினை நிறைவேற்றும் பணியில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வினை கனிவோடு பரிசீலனை செய்து தமிழக முதல்வர் இதனை ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படுத்திட உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலக பணியாளர்கள் நலன் கருதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை பரிசீலித்து மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கும் போதெல்லாம் தமிழகத்திலும் அந்த உயர்வு செயல்படுத்தப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, அரசுக்கு இந்த அகவிலைப்படி உயர்வால் ஓர் ஆண்டுக்கு ரூ.2,587.90 கோடி கூடுதலாக செலவாகும். எனினும், அரசாங்க அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.