ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

0
160
action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field
action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.

உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், முதலிய 6 கிரிக்கெட் நாடுகளின் புகழ்பெற்ற ஜாம்பவான் வீரர்களை இணைத்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வருகின்ற நவம்பர் மாதம் கிரிக்கெட் உலகில்  தொடங்க உள்ளது.

இந்தப் போட்டியில் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலிஸ், குமார் சங்ககாரா, இயான் மோர்கன், ஷேன் வாட்சன் ஆகியோர் மோதவிருக்கும் அதிரடியான ஐஎம்எல் டி -20 தொடர் நவம்பர் 17 2024 முதல் தொடங்கி டிசம்பர் 8 2024 வரை நடைபெற உள்ளது.

இதில் இந்தியா சார்பில்  அணியை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வழிநடத்த உள்ளார். சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர்களின் முதல் 4   போட்டிகள் மும்பை நாவியில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 17ஆம் தேதி முதல் போட்டியாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியை வழிநடத்தும் சச்சின் டெண்டுல்கரும் இலங்கையை வழிநடத்தும் குமார் சங்ககாராவும் மோதும் த்ரில்லான ஆட்டமாக நிகழப் போகிறது. 2- வது போட்டியில் வாட்சனின் ஆஸ்திரேலியா காலிசின் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. அடுத்ததாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும். ஷேன்  வாட்சனின் ஆஸ்திரேலியா மற்றும் பிரையன் லாராவின் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் ஒரு பரபரப்பான ஆரம்பம் நிகழ உள்ளது.

இதன் பின்னர் நவம்பர் 21-ஆம் தேதி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அட்டல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு போட்டிகள் மாற்றப்பட்டு இந்தியாவை, தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ளது. 6 போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது.

பின்னர் லீக் போட்டிகள் ராய்ப்பூரில் ஷாகித் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாற்றப்பட்டு இறுதிப்போட்டி வரை அங்கேயே நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 28 அன்று இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதும் போட்டியானது இந்த ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

அதேபோல் அரையிறுதி மற்றும் டிசம்பர் எட்டாம் தேதி அன்று நடைபெறும் இறுதிப்போட்டி உள்பட 8 ஆட்டங்கள் ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கட் லீக் முதல் பதிப்பின் சாம்பியன்கள் மகுடம் சூட்டப்பட உள்ளார்கள். சச்சின் டெண்டுல்கரை மீண்டும் களத்திற்கு அழைத்து வந்த சாதனையை செய்து மகத்தான பெருமையை ஐஎம்எல் பெற்று கொண்டது.