திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!

0
100

திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!

ராமநாதசுவாமி திருக்கோயிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட பொதுவிருந்தில் அதிமுகவினருக்கு இடமில்லை என கூறியதால் அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொது விருந்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் திருக்கோயில் நிர்வாகத்தால் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொது விருந்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொது விருந்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள் உணவு அருந்த வரிசையில் அமர்ந்த போது திமுகவினர் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி உள்ளதாகவும், அதிமுக கவுன்சிலர்கள் உட்கார வேண்டாம் அதிமுக கவுன்சிலர்களிடம் திருக்கோயில் ஊழியர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் திருக்கோயில் நிர்வாகம் ஆளுங்கட்சியினரை மகிழ்ச்சிப்படுத்த அதிமுகவின் புறக்கணிக்கும் விதமாக நடந்து கொள்வதாக திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் முறையிட்டனர்.

இதனை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்த அதிமுக கவுன்சிலர்கள் பொது விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து அங்கிருந்து புறப்பட்டனர். அதிமுக கவுன்சிலர்களின் இந்த வாக்குவாதத்தால் பொது விருந்து நடைபெற்ற திருக்கல்யாண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொது விருந்தில் சட்டமன்ற உறுப்பினர், திமுக கவுன்சிலர்கள் மற்றும் ராமேஸ்வரம் வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.