மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

0
54

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு: அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் செல்வகுமாரும், உதவியாளர் அம்பிகாவும் வாகனத்தில் இருந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி வாகனம் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக செல்வகுமாருக்கும் அம்பிகாவுக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

இதே போன்ற சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை இடமாற்றம் செய்யும் போது ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. வாகன ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு நோயாளியை வாகனத்தில் இருந்து வெளியேற்றிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

author avatar
Parthipan K