பாமக உட்கட்சி பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படாமல் நாளுக்கு நாள் பிரச்சனையானது வளர்ந்து கொண்டே செல்கிறது. அப்பா மகனுக்குமிடையேயான இந்த பிரச்சனையில் கட்சியே இரண்டு அணிகளாக பிரிந்து ஆதரவு எதிர்ப்பு என செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. இதற்கு காரணமாக அமைந்த இளைஞர் அணி தலைவர் பதவி நியமனத்தில் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் எடுத்த முடிவில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்குமரன், பின்னர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மகள் வழி பேரனான முகுந்தன் நியமிக்கப்பட்ட போதும் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
மேலும் மேடையிலிருந்த அவர் கையிலிருந்த மைக்கை வீசி தான் தனி அலுவலகம் திறந்துள்ளதாகவும், தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் பொது வெளியில் அறிவித்தார். இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு கிளப்பியதை கேட்டு சுதாரித்து கொண்ட அவர் தலைவர் பொறுப்பில் இனிமேல் தானே செயல்படுவதாக அறிவித்தார். அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு செயல் தலைவர் பதவியை அளித்தார். ஆனால் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் இந்த அறிவிப்பை ஏற்காமல் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் அவர்களுக்கு எதிராக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த சூழலில் குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சி தலைவர்கள் என பலரும் சமாதானம் செய்ய முயற்சித்தும் மருத்துவர் ராமதாஸ் இந்த விவகாரத்தில் சமாதானம் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தனக்கு கட்டுப்படாத கட்சியின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் என பழைய நிர்வாகிகளை மாற்றி தனக்கு ஆதரவான புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். அந்த வகையில் நாளை மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் திருமண நாளான இன்று அன்புமணி ராமதாஸ் பெற்றோரிடம் ஆசி வாங்க வருவார். அதனால் இப்பிரச்சனையில் ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது வரை அன்புமணி ராமதாஸ் பெற்றோரை சந்திக்க வரவில்லை எனவும், திருமண நாளுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.