சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!! கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

0
72

சென்னையில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளாா்.

சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே நகரில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி கண்டறியும் இரண்டாம் கட்ட முகாமை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் ஆகியோா் நேற்று தொடங்கி வைத்தனா்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்,


தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் ‘ஜீரோ சர்வே’ மூலம் 2வது கட்டமாக, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 68 நாட்களுக்குப் பிறகு, எந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது..? என்பதை கண்டறியும் ஆய்வை தொடங்கி உள்ளோம். சென்னையில் தினசரி 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த மருத்துவ முகாம்களை இரவு நேரங்களிலும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் எந்தளவு பாதிப்பு ஏற்படுகிறதோ, அதே அளவிற்கு பரிசோதனையையும் அதிகப்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 57 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அறிகுறி உள்ள 30 லட்சம் பேர் இதுவரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 2.25 லட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை, இந்த மாத இறுதிக்குள் 7 முதல் 6 சதவீதமாக குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நோய்த் தடுப்பு விழிப்புணா்வுகள் தற்போது பொதுமக்களிடம் குறைந்து வருகிறது. இதனால் நோய் தொற்று எளிதில் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. சென்னையில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து 2.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபா் மற்றும் நவம்பா் ஆகிய இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு முன்பு தகரம் அடிப்பது கடந்த 25 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

author avatar
Parthipan K