Home News சிறை தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

சிறை தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

0
சிறை தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில் அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த விதத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தின்போது சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரகுமாரி, அந்த சமயத்தில் அவருடைய கணவர் பாபு வாய் பேச இயலாத மற்றும் காது கேளாதோர் குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். அந்த சமயத்தில் சமூகநலத்துறை அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய கணவரின் நிறுவனத்திற்கு 15 .45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக இந்திரகுமாரி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதேசமயம் இந்த நிதியின் மூலமாக குழந்தைகளுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை அப்போதைய சமூக நலத்துறை செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திரகுமாரி, அவருடைய கணவர் பாபு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்படும் நேரத்தில் சமூக அறக்கட்டளைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரியாக இருந்தவர் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். ஆகவே அவர் இந்த வழக்கில் கடந்த வருடம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் கொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் விசாரணை நிறைவு பெற்று சூழ்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவருடைய கணவர் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்திருக்கிறார் இவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி சிறைதண்டனை பெற்ற ஒரு சில நிமிடங்களிலேயே திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி உண்டானது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு சுவாசக் கோளாறு இருந்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.