ஸ்டாலினை பாராட்டிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

0
88

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றால் அது மிகை ஆகாது.

அதோடு எதிர்க் கட்சியை சார்ந்தவர்களும் கூட அவர் மீது குற்றம்,குறை சொல்வதற்கு சற்று பயந்த தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படி ஒரு ஆற்றல் மிக்க மனிதராக முன் சமூக அக்கறை மிக்க அரசியல்வாதியாகவும், பெண்கள் மீது அதிக அக்கறை கொண்டவராகவும் எதிர்க்கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்த சூழ்நிலையில், ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயலலிதா போலவே செயல்படுகின்றார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இன்னொருபுறம் இது அதிமுக தொண்டர்ளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. நோய்த்தொற்று காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும், பெற்றிருக்கிறது இருந்தாலும் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது என்று அதிமுக உட்பட பல முக்கிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதேபோல சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து திமுகவை விமரிசனம் செய்யும் நடவடிக்கையில் அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் ரவுடிகளை ஒடுக்குவதில் மிகவும் அதிரடியாக களமிறங்கிய தமிழக காவல்துறை ஸ்டாமின் ஆபரேஷன் என்ற பெயரில் ஒரு ஆபரேஷனை நடத்தி கடந்த 5 வருடங்களாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இதனை தமிழகத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், ரவுடிகளை ஒடுக்குவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று கோரிக்கை மனுவை வழங்கி இருக்கின்றார்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நான்கு மாதங்களில் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், மதுரை மாநகராட்சியில் இருக்கக்கூடிய பிரதான சாலைகள், தெருக்கள், உள்ளிட்டவை மேடு, பள்ளமாக இருக்கிறது எனவும், அதனை மிக விரைவில் சீரமைத்து கொடுக்க வேண்டும் எனவும் பாதாள சாக்கடை தண்ணீர் குடி நீரில் கலப்பது தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து உரையாற்றிய அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எவ்வாறு ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொண்டாரோ, அதே போல தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ரவுடிகளை ஒடுக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது என பாராட்டியிருக்கிறார். அதிமுக தலைமை சட்டம் ஒழுங்கு நிலைமையை விமர்சனம் செய்து வருகின்ற சூழ்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதற்கு எதிர்மாறாக முதலமைச்சரின் நடவடிக்கையை பாராட்டி பேசியிருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே பல்வேறு யூகத்தை கிளப்பியிருக்கிறது.