இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

0
140
#image_title

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

இந்துக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் இரு மதத்தினரிடையே பிரிவினை ஏற்படும் வகையிலும் பேசிய மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட மதபோதகர் பிரின்ஸ் கால்வின் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசியுள்ளார். இந்நிலையில் அவர் பேசிய ‘வீடியோ’ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிந்து அமைப்பினரிடையே கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி ஹிந்து மக்கள் கட்சியினர் இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதே போல ஹிந்து முன்னணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினரும் அன்று இரவே வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மத பிரிவினையை தூண்டும் விதமாக பேசிய மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு குற்றம் சட்டபட்ட மதபோதகர் மீது FIR பதிவு செய்தும் காவல்துறையினர் அவரை கைது செய்யாது வேடிக்கை பார்ப்பதாக ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சம்பந்தபட்ட சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். இதனால் சம்பந்தபட்ட மத போதகருக்கு கைது நெருக்கடி அதிகரித்துள்ளது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் அந்த சர்ச் உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, ‘ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மத நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும், இரு மதத்தினரின் நல்லுறவை கெடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் அவர் ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் கேவலமாக சித்தரித்துள்ளார். எங்கள் ஆலயத்தின் புனிதமான பலிபீடத்தை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தியதால் எங்கள் திருச்சபை மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இவ்வாறு இரு மதத்தினரிடையே பிரிவினையை துாண்டும் வகையில் பேசிய பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோஸ்வா டேனியலிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, ”ஹிந்து – கிறிஸ்தவ மக்களிடம் பிரிவினையை துாண்டும் பிரின்ஸ் கால்வின் மீது, பேராயர் தீமோதி ரவீந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பேராயர் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் போராடுவோம்,” என்று கூறியுள்ளார்.