நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

0
102
#image_title

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.

பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளர் அருளரசனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நாகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம், பதிவாளர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அரசு பணியாளர் சங்கத்தினர் நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளரை கைது செய்ய வலியுறுத்தியும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காதா அரசு மற்றும் காவல்துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

author avatar
Savitha