தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் குறைந்து வருவதால் நிம்மதி!

0
53
Corona Patients
Corona Patients

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் குறைந்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை 36ஆயிரம் என்ற உச்சத்தைத் தொட்டு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 20,421 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில், கோவையில் 2,645 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,644 பேரும், ஈரோட்டில் 1,694 பேரும், சேலத்தில் 1.071 பேரும், திருப்பூரில் 1,068 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு குறைந்து வந்தாலும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இன்று 434 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 50 பேரும், கோவையில் 38 பேரும், சேலத்தில் 34 பேரும், வேலூரில் 29 பேரும், திருச்சி மற்றும் செங்கல்பட்டில் 21 பேரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழிழந்துள்ளனர். இவர்களில் 110 பேருக்கு கோமார்பிடிடீஸ் எனப்படும் இணை நோய் இல்லை என்றும், வெறும் காய்ச்சல் மட்டுமே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 33,161 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,44,289 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பும் உயிரிழப்பும் சற்று குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.