திமுக பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது-ஸ்டாலின்

0
180
DMK Leader MK Stalin Latest Speech About Hindi Imposition Protest-News4 Tamil Latest Online Tamil News Today
DMK Leader MK Stalin Latest Speech About Hindi Imposition Protest-News4 Tamil Latest Online Tamil News Today

பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு எதிரான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் வாங்கியதால் திமுக பயந்து ஒதுங்கவில்லை என்றும், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மறைந்த திமுக நிர்வாகியான ஆயிரம் விளக்கு உசேன் அவர்களின்  நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் ஒத்தி தான் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடப்பதற்கு முன்னதாக புதன் கிழமை காலை ஆளுநர் மளிகையில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆளுநர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என ராஜ்பவனில் இருந்து அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ஆர்.பாலுவுடன் ஆளுநரை சந்திக்க சென்றதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அந்த சந்திப்பில் திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் விளக்கமாக கேட்டதாகவும், அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்தியாக வந்துள்ளது, மேலும் இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசவில்லை என்றும் எடுத்துக் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், நான் மத்திய அரசின் பிரதிநிதி என்னை நம்புங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். மேலும் ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போதே, அமித்ஷா தனது கருத்து பற்றி விளக்கம் அளித்தார், இதையடுத்தே கட்சி நிர்வாகிகளுடன்  கலந்து பேசி போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தோம் என்று தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக சரணடைந்துவிட்டதாகவும், பயந்து ஒதுங்கிக் கொண்டதாகவும் சில ஊடகங்கள் திட்டமிட்டே செய்தியை திரித்துக் கூறி வருகின்றன என்றும், திமுகவை பொறுத்தவரை பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். முன்னதாக ஆயிரம் விளக்கு உசேன் திமுகவிற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினார்.

Previous articleகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக மக்கள் கோரிக்கை
Next articleபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் என்ஜீனை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்