அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன?

0
41

அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன?

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சரா இருந்தபோது,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டார் என்று புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் இதய அறுவை சிகிச்சை முடிந்து தனியார் மருத்துவமனையில் இருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சிறையில் ‘ஏ’ வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் இல்லம்,செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.மேலும் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு,அவரது கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரத்தில் மற்றொரு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

மேலும் கோவை ராமநாதபுரம் மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் முத்துபாலனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியது.
மேலும் திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியது.

இதற்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதனின் வீடு,அலுவலகம் மற்றும் அவரது பண்ணை இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.22 லட்சம்,60 சொத்து பத்திர ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.16.6 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.