அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

0
89
#image_title

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை அளித்த பேட்டியில், ஊழல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் ஊழலில் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர் அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன.

முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக மற்றும் திமுக என இருகட்சிகளும் ஆட்சி செய்த இந்த காலத்தை குறித்து விமர்சிக்கும் வகையிலான அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினரிடம் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அண்ணாமலையை விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார். அதே போல இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்து விட்டனர். அந்த வகையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசுவதற்கு தராதரமும், யோக்கியதையும் அண்ணாமலைக்கு இல்லை. ஊழல் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதியில்லை. குற்றவாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுக்கிறார் என அவர் மீது அவரது கட்சியினரே புகார் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

மேலும் 40 சதவீத கமிஷன் ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சி தான். கொலை, பலாத்காரம் வழக்கு குற்றவாளிகளுக்கெல்லாம் பணம் வாங்கிக்கொண்டு பாஜகவில் பதவி வழங்கி வருகிறார். எம்பியாகவோ, எம்எல்ஏவாகவோ ஏன் கவுன்சிலராக கூட இதுவரை அண்ணாமலை வென்றதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

அதிமுகவை பிடிக்காவிட்டால் அண்ணாமலை விலகிக் கொள்ளலாம். டெல்லியில் அண்ணாமலையை வைத்துக் கொண்டே எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகையில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அவரது தலையில் கொட்டுவது போல் அண்ணாமலையை வைத்துக் கொண்டே தெரிவித்தார். அப்போதே அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என சொல்லியிருக்கலாமே!

மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. மேலும் திமுகவின் பி டீமாக அண்ணாமலை செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக கட்சி தலைமை சொல்வதை கேட்காமல் இவர் தனி பாதையில் செல்வதை பார்த்தால் அண்ணாமலை வேறு, பாஜக வேறு என தோன்றுகிறது. தனி அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுகவை பிடிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என சி.வி.சண்முகம் மிகவும் காட்டமாக தெரிவித்தார்.

மேலும் அதான் உங்களுக்கு அதிமுகவை பிடிக்கலையே போக வேண்டியது தானே. யாரு இழுத்து புடிச்சா, ஏன் எங்களை புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. ஊழலுக்காக கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக ஆட்சியில் தான். ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் அருகதை இல்லை என்றும் பாஜகவையும் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.