11ம் வகுப்பு சேர்க்கை, மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்புவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்!

Photo of author

By Mithra

11ம் வகுப்பு சேர்க்கை, மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்புவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்!

Mithra

Dr Ramadoss

9ம் வகுப்பு மதிப்பெண் மூலம் 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் எனக்கூறி மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்பக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நுழைவுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்த பள்ளிக் கல்வித்துறை, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாற்றி அறிவித்தது.

இந்நிலையில், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை என டாக்டர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாமக சுட்டிக்காட்டிய தவறை தமிழக அரசு சரி செய்திருப்பதாக கூறியுள்ள அவர், மாணவர் நலன் தொடர்புடையவற்றில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

9-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்புக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படாத நிலையில் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

2019-20ஆம் கல்வியாண்டில்  9-ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வி ஆணையரகம்  வெளியிட வேண்டும்.

உயர்நிலைப்பள்ளிகளில் படித்து மேல்நிலைப்பள்ளிகளில் 11-ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல் இருக்காது.  அவர்களுக்கு அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல்  வழங்க அரசு ஆணையிட வேண்டும்.

இவை அனைத்தையும் முடித்து ஜூன் மூன்றாவது வாரத்திற்குள் வகுப்புகளை தொடங்குவது சாத்தியமில்லை என்பதால், 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை சில வாரங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே போன்று, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு சான்றிதழ்களை வழங்க முன்வர வேண்டும் என பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.