இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
53

தமிழகம் மற்றும் பிற வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது என்ற தவறான செய்தியை நம்பி, தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி சென்றுள்ளனர்.

ஆனால், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் அவர்களை இ-பாஸ் கட்டாயமாக தேவை என்றும் இல்லையேல் அனுமதிக்க முடியாது என்றும் கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 6 மாதங்களுக்குப் பிறகு கேரளாவிற்கு வேலைக்கு செல்லலாம் என்று வந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம், கேரளாவில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருப்பதாகவும், இதுவரை ரத்து செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருபவர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருவோர், கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்வோர் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தவறான செய்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K