கசப்பு நிறைந்த மணத்தக்காளி கீரை குடல் புண்,வாய்ப்புண் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இந்த கீரை மட்டுமின்றி மணத்தக்காளி காயும் வயிற்றுப்புண்களை குணப்படுத்த உதவுகிறது.அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாக மணத்தக்காளி கீரையில் தண்ணி சாறு செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:-
ஒரு கைப்பிடி மணத்தக்காளி கீரை
அரை தேக்கரண்டி வெந்தயம்
அரை தேக்கரண்டி சீரகம்
இரண்டு வர மிளகாய்
கால் தேக்கரண்டி மிளகு
10 சின்ன வெங்காயம்
10 பூண்டு பற்கள்
கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
ஒரு தேக்கரண்டி எண்ணெய்
ஒரு மூடி துருவிய தேங்காய்
ஒரு கப் அரிசி ஊறவைத்த நீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரையை எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யுங்கள்.
அடுத்து ஒரு மூடி தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பை பற்ற வைத்து வாணலி வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,வெந்தயம்,மிளகு போட வேண்டும்.பிறகு வர மிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு பற்களை அதில் போட்டு வதக்க வேண்டும்.
அதற்கு அடுத்து மணத்தக்காளி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.கீரை நன்கு சுண்டி வரும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள் போட்டு வதக்க வேண்டும்.பின்னர் அரிசி ஊறவைத்த நீர் ஒரு கப் அளவிற்கு எடுத்து அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்து வந்த பிறகு அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.ஐந்து நிமிடங்கள் வெந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.இந்த மணத்தக்காளி தண்ணி சாறு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.