ADMK: இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இது தொடர்பாக மழுப்பான பதிலை கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த கட்சியின் தலைமயை பாஜக கையாண்டது. அந்தநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதல்வராக நியமித்துவிட்டு சென்றார்.
ஒருபக்கம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். சசிக்கலா சிறைக்கு சென்றுவிட ஓ.பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிச்சாமியையும் ஒன்றிணைக்க பாஜக காய்களை நகர்த்தியது. ஒருகட்டத்தில் அதில் வெற்றியும் பெற்றது. ஆட்சியில் இருந்த 5 வருடமும் பாஜகவோடு இணக்கமாக செயல்பட்டது அதிமுக.
இதை திமுக கடுமையாக விமர்சித்து வந்தது. மாநில சுயாட்சியை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டார். அடிமை போல செயல்படுகிறார்கள் என திமுக தொடர்ந்து விமர்சித்து வந்தது. இது அதிமுகவிற்கு பிரச்சனையாக இருந்தாலும் பாஜகவின் உறவை துண்டித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் அதிமுக தோற்றது.
இதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே என அதிமுக தலைமை முடிவெடுத்தது. பாஜகவுடன் கூட்டணி நீடித்தால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தோற்போம் என உணர்ந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த நேரத்தில் அண்ணாமலை அதிமுகவை விமர்சிக்க, அதையே காரணம் காட்டி ‘இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை சமாதனம் செய்ய பாஜக எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அதிமுக கூட்டணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் ‘பாஜகவுடன் கூட்டணி அமையுமா?’ என பழனிச்சாமியிடம் ஒரு செய்தியாளர் கேட்டதற்கு ‘திமுகவை தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி இல்லை’ என பதில் சொல்லியிருக்கிறார். பழனிச்சாமி கூறியிருப்பதை பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.