எடப்பாடி காட்டிய அதிரடி! தெரிந்துதான் செய்தாரா?

0
69

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டசபையில் அறிவித்த பல அதிரடியான அறிவிப்புகள் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமடைய செய்திருக்கிறது.

அதேபோல தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வெகு காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் ஆட்சி காலத்தில் வன்னியர்களை உள்ளடக்கிய நூற்றிற்கும் மேலான ஜாதிகளை ஒன்று சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று சான்றளித்து அதற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இருந்தாலும் வன்னியர்களுக்கு என தனியான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டங்கள் செய்து வந்தது.

இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், சீர்மரபினர்க்கு 7 சதவீதமும், இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது .முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை வன்னியர் சமூகத்தினர் வெகுவாகவே வரவேற்று இருக்கிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் தெரிவிக்கும்போது எங்களுடைய கால்நூற்றாண்டு கால போராட்டத்திற்கு தற்சமயம் தான் உண்மையான வெற்றி கிடைத்திருக்கிறது. பல தடைகளுக்கு இடையில் இதை சாதித்துக் காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்களுடைய சமூகம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கி பயிர் கடன் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை வாங்கிய நகை கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்திருப்பது வெகுவாக வரவேற்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கி இருக்கின்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கிறார். அவருடைய இந்தக் கடைசி நேர அதிரடியான அறிவிப்புகள் தமிழக தேர்தல் களத்தில் இருந்த போக்கையே மொத்தமாக மாற்றி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.