ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். பாஜகவுடன் கூட்டணி அமைத்தே சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை அதிமுக சந்தித்தது. ஆனால், இரண்டு தேர்தலிலுமே தோல்வி.
இதற்கு மேல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அவ்வளவுதான் என அலார்ட் ஆன எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது. பாஜக தரப்பில் எடுக்கப்பட்ட சமரச பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில்தான் இன்று காலை டெல்லி சென்றுள்ளார் பழனிச்சாமி. அங்கு அமித்ஷா உள்ளிட்ட பாஜக பெரிய தலைகளை அவர் சந்திக்கவுள்ளார் என்கிறார்கள்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. சமீபத்தில் ‘பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என செய்தியாளர்கள் பழனிச்சாமியிடம் கேட்டபோது ‘தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி எப்போதும் இல்லை’ என அவர் சொல்லாதது அவரின் மனமாற்றத்தை காட்டுவதாக இருந்தது. இந்நிலையில்தான் இன்று டெல்லி சென்றிருக்கிறார். ஏற்கனவே, ஈஷோ மையத்தில் சிவராத்திரி விழாவில் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசியிருந்தார். இன்று மாலை வேலுமணியும் டெல்லி செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி இன்று டெல்லி சென்றிருக்கிறார். அவர் யாரை சந்திக்க போகிறார் என்கிற செய்தியும் எங்களுக்கு வந்துள்ளது. எனவே, மும்மொழிக் கொள்கை தவறு என சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் வலியுறுத்த வேண்டும்’ எனவும் நாசுக்காக பேசியிருக்கிறார்.