தமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!

0
67
Dpi office chennai
Dpi office chennai

தமிழகத்தில் +1 வகுப்பில் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால், +1 வகுப்பு சேர்க்கை நடத்த பல்வேறு பள்ளிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், +1 வகுப்பு சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையைவிட கூடுதலாக 10% முதல் 15% வரை சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை கேட்டு மாணவர்கள் அதிகமானோர் விண்ணப்பித்தால், பள்ளி அளவில் தொடர்புடைய பாடங்களுக்கு தேர்வு நடத்தலாம். அந்தத் தேர்வுகள் தொடர்புடைய பாடத்தில் இருந்து 50 வினாக்கள் இருக்கலாம்.  தேர்வில் அதிக மதிப்பெண் கொண்ட மாணவர்களை அந்த பாடப்பிரிவுக்கு சேர்க்கை நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3வது வாரத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தொடங்க வேண்டும். அதே நேரத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு என்ற ஒன்றுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் கொண்டவர்களை தேர்வு செய்வது, நுழைவுத்தேர்வாகவேக பார்க்கப்படுகிறது.