விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி!

Photo of author

By Parthipan K

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி!

Parthipan K

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே குந்தலபட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மருந்து கலக்கும் அறையில் செங்குன்றாபுரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் (வயது 55) என்பவர் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு மருந்து கலக்கும் அறை முற்றிலும் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் கிருஷ்ண குமார் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்பு துறையினர் வேறு அறைகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெடி சத்தம் கேட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜை தேடி வருகின்றனர்.