எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 100% சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் இலவசம்!!

Photo of author

By Gayathri

பெட்ரோல் மற்றும் டீசலினால் ஓடக்கூடிய வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மக்களுக்கு பெரிதளவும் விருப்பம் காட்டாததால் அரசு பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்ட புதிய திட்டம் தான் எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு 100% சாலை வரி விலக்கு மற்றும் பதிவு கட்டணம் இலவசம் போன்றவை.

தெலங்கானா மாநிலம்தான் இப்படியொரு அதிரடி அறிவிப்பைச் செய்திருக்கிறது. காற்று மாசுவில் டெல்லி, நொய்டா, மும்பை போன்ற மாநிலங்கள் வரிசையில் தெலங்கானா வந்து விடக் கூடாது என்பதில் மும்முரமாக இருக்கிறது தெலங்கானா அரசு.

தெலங்கானா மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், எலெக்ட்ரிக் வாகனச் சட்டத்தின் கீழ் இந்தப் புதிய GO (Government Order)-யை வெளியிட்டிருக்கிறார்.எலெக்ட்ரிக் டூ-வீலர்கள், 3 வீலர்கள், கார்கள், கமர்ஷியல் பேசஞ்சர் வாகனங்கள், முக்கியமாக டேக்ஸிகள், பேருந்துகள், எலெக்ட்ரிக் ட்ராக்டர்கள் போன்ற எல்லாவற்றுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் சாலை வரியாக, வாகனங்களைப் பொருத்து 9% முதல் 12% வரை வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல் பதிவுக் கட்டணத்தைப் பொருத்தவரை பைக் என்றால் சுமார் 550 முதல் 650 ரூபாயும், கார் என்றால், 1,500 ரூபாய் வரையிலும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இனி இந்தச் செலவு எலெக்ட்ரிக் வாகனங்களில் இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறது.

மேலும், மாநிலம் சார்பாக ஓடும் அரசு எலெக்ட்ரிக் பஸ்கள் அனைத்தும், அதன் வாழ்நாள் முழுதும் சாலை வரி கட்டத் தேவையில்லை. இதுவே பொது நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் பெயரில் இயங்கும் எலெக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களுக்கு, இந்த வரித் தளர்வு 2026-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை பொருந்தும். அதன் பிறகு இது நீட்டிக்கப்படுமா என்பதை அரசு இனிமேல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.