பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

0
147
#image_title

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

ஆசை வார்த்தைகளை கூறி பெண் வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது,

நான் கோவையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அவர் மாலத்தீவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செப் ஆக பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி நிச்சயம் செய்வதாக தேதி குறிக்கப்பட்டது. இதன் காரணமாக நாங்கள் செல்போனில் பேசி பழகி வந்தோம்.

இந்த நிலையில் எனது வருங்கால கணவரான அந்த வாலிபர் கோயம்புத்தூர் திரும்பியதும் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி காரில் ஆனைகட்டி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தோம். அப்போது அவர் மது அருந்தினார். என்னையும் மது அருந்த வற்புறுத்தினார். நான் மறுக்கவே இதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் என்னை சமாதானம் செய்தார். பின்னர் நாங்கள் இருவரும் காரில் ஊருக்கு புறப்பட்டோம்.  ஊருக்கு திரும்பி வரும் வழியில் நடுவழியில் காரை நிறுத்தி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் செல்போன் மூலமாக கர்ப்பமான தகவலை அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் இப்போது என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது. எனவே அன்னாசி, பப்பாளி முதலிய பழங்களை சாப்பிட்டு கருவை கலைத்து விடு! என்று கூறினார். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் நானே எனது மனதை கல்லாக்கி கொண்டு கருவை கலைத்தேன்.

ஆனால் அதன் பின்னரும் அவர் ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகைகள் தந்தால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று வரதட்சனை கேட்டு திருமணம் செய்வதை தட்டி கழித்தார். இதற்கு அவரது தாய், தந்தையரும் உடந்தை. எனவே என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது அதிக வரதட்சனை கேட்டு திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்த இளம் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.