கணவன் கொலை : மனைவி ,கள்ளக்காதலன் கைது!

0
155

சென்னை சூளைமேட்டில் உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேடு, கண்ணகி தெருவைச்சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். செல்வம் மது பழகத்துக்கு அடிமையானவர் என்பதால் விஜயலட்சுமிக்கு மோகன் என்ற முண்டக்கண்ணு மோகன் (54) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 6 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்து, செல்வம் மனைவி விஜயலட்சுமியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி கள்ளக்காதலுக்கு குறுக்கே நின்ற கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இந்நிலையில் உணவில் பூச்சி மருந்து விஷம் கலந்து கொடுத்து, கணவர் செல்வத்தை விஜயலட்சுமி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு கள்ளக்காதலன் மோகனே திட்டம் தீட்டி கொடுத்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயலட்சுமியுடன் கைதான மோகன் கொடூர குற்றவாளி ஆவார். அவர் மீது 7 கொலை வழக்குகள் மற்றும் 4 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியைச் சேர்ந்த அவர், சென்னை நெற்குன்றம் மல்லிகை அவென்யூவில் வசித்தார்.

விஜயலட்சுமி மீதும், அவரது காதலன் மோகன் மீதும் சூளைமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K