2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

0
37

2,000 ரூபாய் நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. .
அதன் பிறகு புதிய ரூ.2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்தியது.

ஆரம்பகாலங்களில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் தாள்கள் அதன் பிறகு கணிசமாக குறைந்தது. மேலும் 2018-2019 ஆம் ஆண்டுகளிலிருந்து 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.

குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது.இதனால், மக்கள் மத்தியில் 2,000 ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

ஏதோ ஒன்றிரண்டு தாள்களை எப்போதாவது அரிதாக காண முடிந்ததே தவிர பெரும்பாலான தாள்கள் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

இந்நிலையில்,கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் சுமார் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.மேலும் புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் இது 10.8% தான் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் தான் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் மே 19 ஆம் தேதியிலிருந்து திரும்ப வாங்கிக்கொள்ள படும்,இதனை வங்கி மூலம் சில வரம்புகளுடன் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது.அதன்படி, அடையாள ஆவணமோ, சீட்டோ இல்லாமல் தனி நபர் ஒருவர் 20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஆரம்பத்திலே 75% நோட்டுகள் பெறப்பட்டுவிட்டதாகவும் ,கடந்த ஜூலை 31 நிலவரப்படி 88% அதாவது ரூ.3.41 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்பது குறிப்பிடத்தக்கது.