கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளுக்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 196 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்துள்ளது.
தற்போது வரையில் அமெரிக்காவில் மட்டும் 16,86,436 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையானது ஒருலட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 4,51,702- பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவை போலவே, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரசால் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அடுத்தடுத்த இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனையடுத்து உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.38 லட்சமாக உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4021 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த முதல் 10 நாடுகள்:
அமெரிக்கா – 1,686,436 பிரேசில்- 365,213 ரஷியா- 344,481 ஸ்பெயின்- 282,852 பிரிட்டன்- 259,559 இத்தாலி- 229,858 பிரான்ஸ்- 182,584 ஜெர்மனி-180,328 துருக்கி-156,827 இந்தியா-138,845.