இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் பேச்சு… சர்ச்சையைக் கிளப்பிய புகார்

0
213

இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் பேச்சு… சர்ச்சையைக் கிளப்பிய புகார்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடிய பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினார்கள். அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அபாரமாக விளையாடி சதமடித்தார். இதையடுத்து 122 ரன்கள் முன்னிலையோடு இந்திய அணி களமிறங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா இங்கிலாந்து பவுலர்களின் வேகத்தில் வீழந்தது . மொத்தம் 257 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 378 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதனால் இந்திய அணிக்கு வெற்றி எளிதாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். நான்காம் நாள் ஆட்டமுடிவில் 259 ரன்களை 4.54 என்ற ரன் ரேட்டில் சேர்த்துள்ளனர். களத்தில் ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் உள்ளனர். ஐந்தாம் நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 119 ரன்களே தேவை என்பதால் இங்கிலாந்து அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின் போது களத்தில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் மேல் இங்கிலாந்து ரசிகர்கள் இனரீதியான தாக்குதல் பேச்சுகளை பேசியதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்பும் இதுபோல ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் போட்டிகள் நடக்கும்போது இனவெறித் தாக்குதல் பேச்சுகள் எழுந்து அவை சர்ச்சைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.