இந்த காரணத்திற்காக தான் கோவில் கட்டினார்.. நடிகர் விஜய் குறித்து நெகிழ்ந்த தாய்..!!
ஒருபுறம் அரசியல் மற்றொரு புறம் சினிமா என பிசியாக வலம் வரும் நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. அதன் பின்னர் தான் அந்த கோவில் நடிகர் விஜய் அவரது தாய் ஷோபனாவிற்காக கட்டியது என்று கூறப்பட்டது.
அதன்படி சென்னை கொரட்டூரில் உள்ள தனது 8 ஏக்கர் நிலத்தில் விஜய் அந்த சாய் பாபா கோவிலை அவரது தாயாரின் ஆசைக்காக கட்டியுள்ளார். இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற சமயத்தில் கூட விஜய் இங்கு பார்வையிட்டு செல்வாராம். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றுள்ளது.
அதில் விஜய்யின் தாயார் ஷோபனா பங்கேற்றிருந்த புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகின. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தாய் ஷோபனா நேற்று அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “நான் நீண்ட நாட்களாகவே நம்முடைய இடத்தில் ஒரு சாய் பாபா கோவில் கட்ட வேண்டுமென ஆசையாக இருப்பதாக கூறி வந்தேன். எனது ஆசையை விஜய் நிறைவேற்றி விட்டார். நான் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறேன். இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய வேண்டும்” என மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது அம்மாவின் ஆசைக்காக கோவில் கட்டியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.