குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

0
149

குழந்தைகளின் சளியை போக்கும் அருமையான மூலிகை கற்பூரவல்லி

கற்பூரவல்லி மூலிகை இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இது வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

இந்த இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்றாக கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். உடல் சூட்டையும் இது தணிக்கும். இதன் இலை மற்றும் காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து நன்றாக கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாறுடன் எட்டு மி.லி தேனை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வந்து விடும்.

கற்பூரவல்லி மூலிகையானது குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

உடலின் தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் இது பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாகும் இது கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறமாக மாறி இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இந்த மாதிரி தயாரித்த நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் விரைவில் கட்டுப்படும்.

வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் பச்சையாக கடித்து மென்று சாப்பிட்டால் விரைவில் உணவு ஜீரணம் ஆகும்.