நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!

0
56

தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே இருந்த நோய்த்தொற்று பாதிப்பின் தினசரி பாதிப்பு தற்சமயம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய தினம் மற்றும் 1947 பேருக்கு நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 1,150 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள் 27 பேர் இதுவரையில் இந்த நோயினால் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் உலக கல்லீரல் அழர்ச்சி தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் கருவில் இருக்கின்ற குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனை முகாமை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் குறைந்து வந்த நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது அதிலும் குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, போன்ற மாவட்டங்களில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

கேரள மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதால் தான் நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட உடனே மருத்துவமனையில் சிகிச்சை தருகிறோம். கேரள மாநிலத்திலிருந்து வருகை தரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் மட்டுமே 13 எல்லைகளில் வாகன சோதனை மூலம் கேரள வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

மக்கள் கட்டாயம் நோய்த்தொற்று வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்து முகக் கவசம் அணியாமல் இருந்துவிடக் கூடாது. இன்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நோய் தொற்று விழிப்புணர்வு நிகழ்வை நடத்துவதற்கு முதலமைச்சர் திட்டமிட்டு அதனைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியம்.தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் பயன் தரும். தற்சமயம் நோய்த்தொற்று சற்று அதிகரித்து வருகின்ற ஒரு சூழலில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.