தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த பாமகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனையாக ஆரம்பித்து தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்படும் சூழல் நிலவி வருகிறது. பாமகவில் தொடரும் இந்த பிரச்சனை தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரமானது கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் தற்போது கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையே நிலவும் கருத்துப் வேறுபாடுகளால், அக்கட்சியின் பலமான வன்னியர் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சமூக வாக்கு வங்கி என்பது தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இந்த வாக்குகள் பாமக, அதிமுக மற்றும் திமுக போன்ற முக்கிய கட்சிகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. பாமகவில் உள்ள உட்கட்சி குழப்பம், வன்னியர் வாக்கு வங்கியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளதோடு, இந்த தாக்கமானது அதனைச் சுற்றியுள்ள மற்ற கட்சிகளிலும் எதிரொலிக்கிறது.
பாமக வலுவிழந்ததால், திமுகவிலும் அதிமுகவிலும் உள்ள வன்னியர் சமுதாயத் தலைவர்களின் செல்வாக்கு மற்றும் முக்கியத்துவம் குறைந்துவிடும் நிலை உருவாகிறது. மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி காலத்திலிருந்தே தங்கள் கட்சி பொறுப்புகளில் வன்னியர்களுக்காக உரிய பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் பாமக அல்லது அக்கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி வேட்பாளரை சமாளிக்கும் வகையில் எதிர் தரப்பில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவது வழக்கம். அதே போல பாமகவின் வியூகங்களை தகர்க்க அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளிலும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருவது வழக்கம்.
அந்த வகையில் குறிப்பாக திமுக சார்பாக பல ஆண்டுகளாக வன்னியர் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் திமுக பொருளாளர் பதவியை துரைமுருகன் வகித்து வருகிறார். இந்நிலையில் வன்னியர் சமூக வாக்குகளை ஆதாரமாக கொண்ட பாமகவில் உட்கட்சி பிரச்சனை தொடருவதால் திமுகவில் துரைமுருகனின் நிலையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீப காலமாக துரைமுருகனின் செயல்பாடுகள் குறைந்து காணப்படுவதும், திமுகவில் இளைஞர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படுவது உள்ளிட்ட காரணங்களை கூறி இவருடைய பொறுப்பு பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சமயம் பார்த்து, எதிர்காலத்தில் துரைமுருகனை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் திமுக தலைமையிலிருந்து வரலாம் என்கிறார்கள் அரசியல் வட்டாரங்கள். இது, வன்னியர் சமூகத்திற்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும் அந்த இடத்திற்கு வேறு ஒரு வன்னியரை நியமித்தால் அதையும் சரி செய்து விடலாம் என திமுக தலைமை திட்டமிட்டு வருகிறதாம்.
ஏற்கனவே திமுகவில் அதிகாரமிக்க தலைவராக இருந்த சேலத்தை சேர்ந்த மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை திமுகவிலிருந்து முற்றிலும் ஓரம் கட்டியதை போல துரைமுருகனையும் ஓரம்கட்ட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. செல்வாக்கு மிக்க தலைவரான வீரபாண்டியாரை ஓரம் கட்டிய போதே பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லாததை புரிந்து கொண்ட திமுக தலைமை பாமக உட்கட்சி விவகாரம் தீவிரமாக போய்க் கொண்டிருக்கும் சூழலில் துரைமுருகன் பதவிக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.