ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தாய் மகன் கைது

0
141
#image_title

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தாய் மகன் கைது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தாக தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து  20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது32). இவருடைய தாயார் மணி(வயது53). மனைவி சோபனா(27). தங்களுக்கு உயர் பதவியில் தெரிந்த நபர் இருப்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கித்தருவதாக மோகன்குமார் உள்பட 3 பேரும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும் வேலைக்கான போலி ஆணைகளையும் தயார் செய்து பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்தள்ளனர். இதனை கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தபோதுதான் அது போலியான ஆணை என்று தெரியவந்தது. பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை கொடுக்கவில்லை.

ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பணத்தின் மூலம் வேன் மற்றும் கார்களை வாங்கி மோகன்குமார் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த மோசடிகுறித்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ரூ.36 லட்சத்து 7 ஆயிரத்தை பலரிடமும் வசூலித்து மோகன்குமாரிடம் கொடுத்ததாகவும் ஆனால் ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் கூறி இருந்தார்.

இந்த மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தலைமறைவாக இருந்த மோகன்குமார், அவருடைய தாயார் மணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடைய மனைவி சோபனாவிடமும் விசாரணை நடைபெறுகிறது.

இந்த மோசடிக்கு பயன்படுத்திய போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தாயும், மகனும் மேலும் பலரிடம் இதுபோன்ற மோசடி நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கைதான தாய், மகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

author avatar
Savitha