வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!

0
76

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே பல மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குடிதாங்கி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் 10 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்திருக்கிறது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.