அதிமுக சார்பாக மிக விரைவில் இந்த 5 பகுதிகளில் மண்டல மாநாடு நடத்தப்படும்! ஓபிஎஸ் அறிவிப்பால் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

0
136

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார்.

இதன் காரணமாக, அதிர்ச்சி கொள்ளான பன்னீர்செல்வம் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை நீக்கினார்.

இந்த நிலையில் அதிமுக தங்களுக்கு தான் சொந்தம் என்று இருதரப்பினரும் உரிமை கொண்டாடி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி, தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்துகிறார். அவர் செல்லும் இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் அதிமுகவில் தனக்குத் தான் தொண்டர்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கும் பன்னீர்செல்வம் தொண்டர்களை இதுவரையில் சந்திக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆகவே தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பன்னீர்செல்வம் நியமனம் செய்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மண்டல மாநாடு நடத்த பன்னீர்செல்வம் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான பணிகளை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள். ஆகவே மிக விரைவில் அதிமுகவின் மண்டல மாநாடு குறித்த அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த மாநாட்டில் தனக்கு தொண்டர்களின் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கை காட்டும் விதத்தில் கூட்டத்தை திரட்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.