“அடுத்த வருஷம் இந்தியாவில் நீங்கள் யார் என்பதைக் காட்டுங்கள்…” பாக் அணிக்கு அக்தர் அட்வைஸ்!

0
127

“அடுத்த வருஷம் இந்தியாவில் நீங்கள் யார் என்பதைக் காட்டுங்கள்…” பாக் அணிக்கு அக்தர் அட்வைஸ்!

இறுதிப் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி வரை போராடி தோற்ற பாகிஸ்தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பேசிவருகின்றனர்.

அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு பிறகு இரண்டு முறை கோப்பையை வெல்லும் அணி இங்கிலாந்துதான்.

இந்த இறுதிப் போட்டியில் குறைவான ரன்களை சேர்த்தாலும், பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் இறுதிவரை போராடி இங்கிலாந்து அணிக்கு பயம் காட்டினர். இந்நிலையில் கோப்பையை இழந்த பாகிஸ்தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக சோயிப் அக்தர் தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசியுள்ளார்.

அதில் “சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். அதனால் தலைநிமிர்ந்து நடங்கள். அடுத்த ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. அதை நாம் வெல்வோம். நீங்கள் ஹீரோக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம். அந்த கோப்பையை வென்று நீங்கள் யார் என்பதைக் காட்டுங்கள். இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அணி நாம்தான். உடல்தகுதியை மட்டும் சிறப்பாக வைத்துக்கொண்டு விளையாடுங்கள். கோப்பை நமக்குதான்” எனக் கூறியுள்ளார்.