பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து!

0
91
#image_title

பஞ்சகவ்யா: செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் மூலிகை மருந்து!

இன்றைய நவீன உலகில் உண்ணும் காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் இரசாயனம் கலந்து விட்டது. இதனால் உடல் விரைவில் ஆரோக்கியத்தை இழந்தது கடுமையான நோய்களை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை விவசாயத்தை கையில் எடுப்பது தான் உலகை அழிவில் இருந்து மீட்க ஒரே வழி.

அந்த வகையில் செடிகளில் உருவாகும் பூச்சிகளை அழித்து செடியின் வளர்ச்சியை அதிகரிக்க பஞ்சகவ்யா பயன்படுத்துங்கள். பஞ்சகவ்யா என்பது மாட்டில் இருந்து பெறப்படும் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை பூச்சி விரட்டி ஆகும்.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு மாட்டு சாணம்
2)நாட்டு மாட்டு கோமியம்
3)நாட்டு மாட்டு பால்
4)தயிர்
5)பசு நெய்
6)வாழைப்பழம்(கனிந்தது)
7)இளநீர்
8)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மை நிழலில் வைத்து 15 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 5 கிலோ மாட்டு சாணம் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு 3 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம் ஊற்றி கலக்கவும். அதன் பின்னர் 1 லிட்டர் மாட்டு பால், 1/2 லிட்டர் தயிர் மற்றும் 1/4 லிட்டர் நெய் சேர்த்து கலந்து விடவும்.

அதன் பின்னர் 1 லிட்டர் இளநீர் தண்ணீர், நன்கு கனிந்த வாழை (3) மற்றும் 3/4 கிலோ நாட்டு சர்க்கரை சேர்த்து கடிகார திசையில் கலக்கவும். பிறகு ட்ரம்மை ஒரு கோணி சாக்கு கொண்டு மூடி கட்டி விடவும்.

காலை மாலை என இருவேளை ஒரு கம்பு கொண்டு அதை 5 முறை கலக்கி விட்டு மூடவும். இவ்வாறு தொடர்ந்து ஒருவாரம் செய்து வந்தால் பஞ்சகவ்யா தயாராகி விடும். ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகவ்யா சேர்த்து செடிகளுக்கு தெளித்து வந்தால் செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். செடியில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டு காய்கள் நன்றாக பிஞ்சு பிடிக்கும்.