கொரோனா மருத்துவமனையிலிருந்து காணாமல் போன நபர்: சாலையோரம் மயங்கி மரணம்!

0
67

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஒருவர் (40 வயதான ஆண்) அப்பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்த அவர் திடீரென காணவில்லை. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால், அவரை காணவில்லை.

இந்நிலையில், நேற்று காலை திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையோரம் ஒருவர் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் இவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தனது வீட்டிற்கு செல்வதற்காக மருத்துவமனையிலிருந்து தப்பித்த இவர் சுமார் 3 கி.மீ தூரம் அதிகாலை நேரத்தில் நடந்து சென்றதால், மூச்சுத்திணறல் அதிகரித்து மயங்கி விழுந்து இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது சடலத்தை உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தனர்.

author avatar
Parthipan K