பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு

0
221
#image_title

பிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப்பட்ட புதிய முனையம் கட்டிட திறப்பு விழா. சென்னை- கோவை இடையே வந்தே பாரத் அதிவிரைவு புதிய ரயில் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8ந் தேதி பிற்பகல் 2.55 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

அங்கு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

பின்னர் பிரதமர் சென்னையில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு அடையாறு ஐ. என்.எஸ். செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார். சென்னை-கோவை இடையே அதிவிரைவு வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காரில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் செல்கிறார். அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு காரில் அடையாறு ஐ.என்.எஸ். இருந்து ஹெலிகாப்டரில் விமான நிலையம் வந்து சேருகிறார். பின்னர் காரில் பல்லாவரம் ராணுவம் மைதானம் செல்கிறார்.அங்கு சென்னை விமான நிலையம் புதிய முனையத்தை தொடங்கி வைக்கிறார்.

அந்த விழாவை முடித்துவிட்டு பிரதமர் மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமருக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் சென்னை வருகையை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்து சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்கின்றனர்.

சென்னை பழைய விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் பிரதமரின் சென்னை நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது திட்டமிடப்பட்டுள்ள பிரதமரின் நிகழ்ச்சிகளின் நேரங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் பிரதமர் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சென்னை நகருக்குள் சாலை வழி பயணத்தை கூடிய மட்டிலும் தவிர்த்து ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Savitha