எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. செய்தியாளர்களிடம் பேசிய அமித்ச்ஷா ‘ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கூட்டணியை ஏற்பது அதிமுகவின் முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் தனிப்பட்ட விஷயங்களில் பாஜக தலையிடாது. தேர்தல் விவகாரங்களில் மட்டுமே பங்கேற்போம். யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என கூறியிருந்தார்.
ஒருபக்கம், இந்த கூட்டணி இணைய அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என அமித்ஷா சொன்னதில் உண்மையில்லை என்கிறார்கள் சிலர். ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டேன். இது உங்களுக்கு சம்மதம் எனில் கூட்டணி’ என அமித்ஷாவிடம் பழனிச்சாமி உறுதியாக சொல்லிவிட்டாராம். இதை அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் செய்தியாளர்களிடம் ‘அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை’ என சொல்லி அமித்ஷா கடந்துபோய் விட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அதேநேரம், இந்த கூட்டணி அறிவிப்புக்கு முன்வரை செங்கோட்டையன் மூலம் பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகிய எல்லோரையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்றி அதோடு கூட்டணி அமைக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருந்தார் எனவும், பழனிச்சாமி கறாராக இருந்ததால் அது கடைசி நடக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான், அதிமுகவின் பெயர், கொடி போன்றவற்றை டிடிவி தினகரன் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த பழனிச்சாமி இப்போது யுடர்ன் அடித்து வருகிறார். டிடிவி தினகரன் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவும் இருக்கும். இதனால்தான் இப்போது வழக்கை வாபஸ் வாங்கியிருக்கிறார் பழனிச்சாமி. அதேநேரம், ஓபிஎஸ் தனியாக கட்சியெல்லாம் துவங்கவில்லை. எனவே, அவரை கூட்டணிக்குள் கொண்டுவர பழனிச்சாமி சம்மதிக்க மாட்டார் என்கிறது அரசியல் வட்டாரம். அதனால்தான், சென்னை வந்தபோது தன்னை ஓபிஎஸ் தன்னை பலமுறை பார்க்க முயன்றும் அமித்ஷா அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது