இனி ஈசியாக விவசாய மின் இணைப்பு பெறலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!!

0
88

விவசாய மின் இணைப்பு பெறுவதில் நிலவிவந்த சிக்கல்களை எல்லாம் அகற்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில நடைமுறைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தில், விவசாய மின் இணைப்புப் பெறுவதில் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிவசாய மின் இணைப்பு தாமதமின்றி கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தங்கள் செய்துள்ளது.

மின்இணைப்புக் கோரும் விவசாயக் கிணறு, கூட்டு உரிமையாக இருக்கும் பட்சத்தில், கூட்டு உரிமையாளர் ஒப்புதல் தரமறுத்தால் விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் கிணறு மற்றும் நிலத்துக்கான உரிமைச்சான்று மட்டும் போதும். வேறு எந்த ஆவணங்களும் தேவை இல்லை.

மின் இணைப்பு வழங்குவதற்கான மின் மாற்றும் மின்கம்பி சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் முடிவுற்ற பின் விண்ணப்பதாரருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அப்போது, மின்மோட்டார் மற்றும் மின்தேக்கி முதலியவைகளை வாங்கி பொருத்தி தயார் நிலையில் தயார் நிலையைத் தெரியப்படுத்தினால் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.

ஒரு சர்வே எண்ணில் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் ஒருவருக்கு 2 கிணறுகள் இருக்கும் பட்சத்தில், தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருப்பின் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும்.

தமிழகத்திற்குள் எந்தப் பகுதிக்கும் விவசாய மின் இணைப்பு இடமாற்றம் அனுமதிக்கப்படும். இதற்கான செலவை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். இட மாற்றத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்பட தேவை இல்லை.

ஒருவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றில் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு இடத்தில் உள்ள அவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றுக்கு அல்லது கூட்டாக சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். கூட்டாக சொந்தமான கிணற்றில் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு இடத்துக்கு அவருக்கு மட்டும் அல்லது கூட்டாக சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு உள்ள கிணற்றின் கூட்டு உரிமையாளர்கள் பெயரில் மின் இணைப்புகள் இருக்க வேண்டும் அல்லது கூட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் பெற வேண்டும். இதனை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தும் வகையில் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

author avatar
Parthipan K