மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

0
82

வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு திமுக, அதிமுக ஆகியவை செயற்குழுவை கூட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சி செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி கட்சி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவலை அளித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நடைபெற இருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பது, கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தலைவர் கமலஹாசன் உருவாக்கிய நாமே தீர்வு இயக்கத்திற்கு பங்களித்தவர்கள், பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கம் கொரோனாவோடு மட்டும் முற்றுப் பெறுவதில்லை. தொடர்ந்து மக்கள் சேவைக்காகவும் புது பிரச்சினைகளுக்காகவும் களத்தில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கட்சியின் உள் கட்டமைப்பு வலுப்பெற்று வருவதையும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் பெருமளவில் இணைந்து வருவதையும் இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மய்யம் வலுப் பெற்று வருவதையும் ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதை குறிப்பிட்ட தலைவர் கமல்ஹாசன் தங்களது தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்து விட்ட நிர்வாகிகளை பாராட்டினார். அனைவரும் ஒருமித்து தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு களப்பணியாற்றி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கிராமசபை கூட்டங்கள் தொடர்ந்து ரத்து செய்து உள்ளாட்சி உரிமைகளை முடக்கி ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கும் ஆளும் கட்சியின் சர்வாதிகார போக்கினைக் கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டது. உள்ளாட்சி உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழக அரசால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்த வலியுறுத்தி மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடுக்க வைத்து மக்களின் உரிமைக்கு என்றும் துணை நிற்கும் தலைவர் திரு கமலஹாசன் அவர்களுக்கு கட்சியின் சார்பாக பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

 

author avatar
Parthipan K