இராஜேந்திரச்சோழன் பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு கொண்டாட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

0
84
Seeman-News4 Tamil Latest Political News in Tamil
Seeman-News4 Tamil Latest Political News in Tamil

இராஜேந்திரச்சோழன் பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு கொண்டாட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தமிழ்ப்பேரரசன் இராஜேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட, தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும் அறமும் செழித்தோங்கிய தொல் மரபினத்தின் வாழ்வியலையும், பண்பாட்டு நகர்வுகளையும், வரலாற்றுத் தடங்களையும் பெருமிதத்தோடு பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டது. அதில் தன் ஆளுமைத்திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் பல கட்டி கடலை கடந்து, தன் வீர மறத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்ப்பேரரசன் எங்கள் பாட்டன் அரசேந்திர சோழன் எனும் இராஜேந்திர சோழன்.

காலவெள்ளத்தால் அழியாத வண்ணம், வானை முட்டும் கோபுரத்தோடு தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பி, வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழி சோழன், ஆடி திருவாதிரை நாளில் பெற்றெடுத்த புவி ஆண்ட புலி மைந்தன் அரசேந்திர சோழன். வடநாடு வரை படையெடுத்து வங்காளத்தை ஆண்ட மகிபாலனை வென்று தனக்கென ஒரு தலைநகரமாக கங்கை கொண்ட சோழபுரத்தை கண்ட பெரும் மன்னன் அரசேந்திரன்.

கிபி 1014 முதல் கிபி 1044 வரையிலான அவரது பொற்கால ஆட்சியில், தற்போதைய இந்தியப் பெருநிலத்தில் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர், ஒரிசா வரை இருந்த எண்ணற்ற தேசங்கள், மலேயா, சிங்கப்பூர் சுமத்ரா தீவுகள், கம்போடியா இந்தோனேசியா என தென் கிழக்கு ஆசியா முழுவதும் சோழப் பேரரசை விரியச் செய்து, தெற்காசியப் பெருங்கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினை வென்றெடுத்து, ஆண்ட மாமன்னராகத் திகழ்ந்தவர் நம் பாட்டன் அரசேந்திர சோழன்.

கடற்போரில் சிறந்து விளங்கியமையால் கடற்புலி எனவும் கடல் வென்ற சோழன் எனவும் பெருமையாக அழைக்கப்படுகிறார். கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்கள் வறுமை தீர்க்க நீர் மேலாண்மையை வெற்றிகரமாகக் கையாண்டவர். இன்றளவும் வறண்ட நிலப்பரப்பாகக் காட்சி தரும் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் மாபெரும் தலைநகரை உருவாக்கி அதற்கென ஏறக்குறைய இருபது மைல் நீளம் உடைய, பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஏரியினைக் கட்டி பல்லுயிர் சூழல் காத்த உயிர்மநேய மன்னன் அரசேந்திர சோழன்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றளவும் நம் கண்கள் முழுக்க ஆச்சரிய கனவாக விரிந்து வானை முட்டி உயர்ந்து நிற்கிற அந்த மகத்தான கோவில் அரசேந்திர சோழனின் கலை ஆர்வத்தை, தமிழர்களின் படைப்பாற்றலை உலகத்திற்குப் பறை சாற்றுகிற ஆவணச் சாட்சியமாக விளங்குகிறது.

அலைகடல் மீது படைபல நடத்தி, கங்கையும், கலிங்கமும், கடாரமும், இலங்கையும் வென்று, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் நான்காவது பெரும் பேரரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரச்சோழனின் பிறந்தநாளில், அவரது பெரும்புகழைப் போற்றி வணங்குவதில் பெருமிதமும், பேருவுவகையுமடைகிறோம்!

தமிழர்களின் வீரத்தையும், தீரத்தையும், அறத்தையும், அறிவையும், ஆற்றலையும் பார் போற்றப் பறைசாற்றி, தமிழினத்தைப் புகழின் உச்சியில் ஏற்றிய தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட வழிவகைச் செய்ய தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.