மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்கு சந்தை சரிவு

0
233
Sensex-and-Nifty-Down-News4-Tamil-Online-Tamil-News-Channel
Sensex-and-Nifty-Down-News4-Tamil-Online-Tamil-News-Channel

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பங்கு சந்தை சரிவு

இந்தியாவில் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்திய பங்கு சந்தை தொடர்
சரிவை சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமில்லாமல் உச்ச நீதிமன்றம் ஏஜிஆர் நிலுவைத்
தொகை குறித்த விவகாரங்களில் எடுத்த நிலைபாடுகளினால் பெரும்பாலான
முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்று அவர்களது முதலீடுகளை
பாதுக்காக்க நினைத்தனர். இவ்வாறு பெரும்பாலான நபர்கள் தங்களிடமுள்ள
பங்குகளை விற்றதும் ஒரு வகையில் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் நிறைய வங்கிகள், தொலைத் தொடர்பு துறை நிறுவனங்களுக்கு
கொடுத்த கடனினால் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. அதனால் வங்கி
பங்குகளும் சரிவை சந்தித்தன.மீதியுள்ள துறைகளில் ஐடி துறையை சார்ந்த
பங்குகள் மட்டுமே ஓரளவு ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வந்தது.

இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பங்கு
சந்தையானது தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது. குறிப்பாக தேசிய
பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,709 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு,
28,869 ஆக வர்த்தகமாகி வந்தது. இதே போல மும்பை பங்கு சந்தை குறியீடான
நிஃப்டி 498 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8468 என்ற நிலையிலும்
வர்த்தகமாகியது. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின்
மதிப்பு 74.27 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இந்திய
பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் இன்று மட்டும் 4.12
லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பினை இழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வரும்
நிலையில், இன்று வரை கொரோனாவினால் ஏறக்குறைய 150 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று வரை மூன்று பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு பெருகி வரும் இந்த கொரோனா வைரஸினால் பெரும்பாலான மாநிலங்களில்
உள்ள உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜிம்கள், மால்கள் ,
கோவில்கள் என அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே இந்திய
பங்கு சந்தை சரிவினை சந்தித்துள்ள நிலையில், இவ்வாறு கொரோனா தொற்று
அதிகரித்து வரும் இந்த நிலையில் இதன் தாக்கமானது இந்திய பங்கு சந்தையில்
இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்ததாக உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில் தொலைத் தொடர்பு துறையை
சேர்ந்த நிறுவனங்கள் தங்களை சுயமதிப்பீடு செய்யக் கூறியது. மேலும்
குறிப்பிட்ட தேதிக்குள் தவனையை கட்ட தவறியதை அடுத்து தொலைத்தொடர்பு துறை
நிறுவனங்களை உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் அனுப்பியது. மேலும்
குறிப்பிட்ட தொகையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் செலுத்தியாக
வேண்டும் என்றும் எச்சரித்து அனுப்பியது.

ஆனால் தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள் தங்களது கணக்கீட்டின் படி குறைந்த
தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்று கூறியுள்ளன. மேலும் இதனால் உச்ச
நீதிமன்றமானது இந்த நிலுவை தொகையினை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும்
தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் உச்சநீதிமன்றம்
இந்த நிலுவை தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்று கறாராக தெரிவித்து
விட்டது. மேலும் இந்த நிலுவை தொகையை கட்டத் தவறினால், தொலைத்தொடர்பு துறை
நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் சிறைசெல்ல நேரிடும் எனவும் உச்ச
நீதிமன்றம் எச்சரித்துள்ளது.இதனால் தொலைத்தொடர்பு துறை சார்ந்த பங்குகள்
மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடன் வாங்கிய வங்கி பங்குகளும் சரிவை
சந்தித்தன.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வெளியேறி
வருவது,சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணங்களாலும் இந்திய பங்கு
சந்தையானது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் சரிவை
சந்தித்து வருகிறது.

Previous article10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் வணிகவளாகங்களை மூடுங்கள் : மாவட்ட ஆட்சியர் அதிரடி!
Next articleதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here