தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடர்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். குடியிருப்பது சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக் கொள்வோம்.
சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சூழலும் அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக அமைகிறது.
வீட்டில் பூஜை செய்யும் பொழுது சிலருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும், எந்த பழம் எந்த தெய்வத்திற்கு உகந்தது, பூஜையை எப்படி ஆரம்பிக்க வேண்டும், எந்த பூக்களை கொண்டு கடவுளுக்கு அர்ச்சனை செய்வது என பலவிதமான சந்தேகங்கள் இருக்கும்.
ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்கள், தெய்வீக சக்தி, லட்சுமி கடாட்சம் ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கும் இடம் பூஜை அறை தான். பூஜை அறையில் நாம் வைத்து வழிபடும் சுவாமி படங்கள் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் பொருட்களும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
பூஜை அறையில் நாம் வைக்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்களும் கூட நமக்கு தெய்வத்தின் அருளை வழங்குவது அல்லத தடுக்கும் ஆற்றலை கொண்டிருக்கும்.கவனக் குறைவாக நாம் விட்டு வைக்கும் சில பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி, பலவிதமான பிரச்சனைகளை நமக்கு தருவதாக அமைந்து விடும்.
பூஜை அறையில் எந்தெந்த பொருட்களை, எப்படி பயன்படுத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்ற விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
1.வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும். வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது.
2.அவல் பொறி, கடலை மற்றும் கற்கண்டு ஆகியவற்றை நிவேதனமாக படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்துதான் கடவுளுக்கு படைக்க வேண்டும். மேலும் நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இலந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவை ஆகும்.
3.வாழையில் நாட்டுப்பழம் நல்லது. குடுமி தேங்காயை சீராக உடைத்து குடுமியை பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால் அதனை மாற்றி விட்டு வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான மற்றும் வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது.
4.வழிபாட்டிற்கு முன்பு சாம்பிராணி தூபம் போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விலக்கும் ஆற்றல் கொண்டது.
5.காய்ந்த பூக்கள், காய்ந்த அல்லது அழுகிய எலுமிச்சம் பழம் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது. இவை வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி விடும்.
அதே போல் பூஞ்சை படித்த எலுமிச்சை பழங்களையும் வைத்திருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். வீட்டில் வைத்திருக்கும் சுவாமி எலுமிச்சை பழம் பூஞ்சை படிந்தாலே அது கேட்ட சக்தியின் அடையாளம் ஆகும்.
6.சுவாமி படங்களை வாரத்திற்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சுவாமி படங்களுக்கு பின் புறம் இருக்கும் தூசுகளையும், ஒட்டடைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
7.பூஜை அறையில் ஒட்டடை மற்றும் குப்பை படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8.விளக்கிற்கு அருகில் கணபதியையும், குல தெய்வத்தின் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும்.
9.விளக்கேற்றிய முழு பலனையும் பெற வேண்டும் என்றால் மற்ற உலோகத்தால் ஆன விளக்குகள் எத்தனை ஏற்றினாலும் குலதெய்வத்திற்கு என தனியாக மண் அகலால் ஒரே ஒரு விளக்காவது ஏற்ற வேண்டும்.
10.பரிகார தீபங்களை கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. இதனால் விலக வேண்டும் என நினைக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து வீட்டிலேயே தங்கி இருக்கும்.