பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை.!! கைது செய்த போலீசார்.!!

0
111

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது.

இதில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இந்த போட்டிக்கு உலகளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக, இந்திய வீரர் முகமது சமி மீது பல்வேறு தரப்பினர் அவதூறு பரப்பினர் எனினும், அவருக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் சிலர் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை நபிஸா அட்டாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இவர் பதிவு செய்துள்ளதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.